பல துறைகளை சேர்ந்தவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 10-09-2019 | 8:42 PM
Colombo (News 1st) கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பல துறைகளை சேர்ந்தவர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், மற்றும் வட மேல் மாகாண சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பள முரண்பாட்டை நீக்குமாறும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது நிர்வாக அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று இயங்கவில்லை. எனினும், ஆட்பதிவு திணைக்களம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்றன. இதேவேளை, சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் இன்று முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது. பதவி உயர்வு வழங்காமை, பயணக்கொடுப்பனவு வழங்காமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.