by Staff Writer 10-09-2019 | 3:25 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்ட ரீதியிலான அதிகாரம் இன்று முதல் தமக்கு கிடைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 2018 வாக்காளர் இடாப்பும் கவனத்திற்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதன் பிரகாரம், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுடன் சுமார் 2 இலட்சம் புதிய வாக்காளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த 17 பேரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயாதீனமாகவும் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இயலும் என அவர் கூறினார்.
இதனடிப்படையில், வேட்பு மனு தொடர்பில் அறிவிக்கப்பட்ட நாள் முதல் 63 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம், எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.