by Staff Writer 09-09-2019 | 7:10 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நாளை (10) முதல் தமது வசமாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலின்போது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விட சுமார் 2 இலட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த 17 பேரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயாதீனமாகவும் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.