வர்த்தககர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

வர்த்தககர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

by Chandrasekaram Chandravadani 08-09-2019 | 2:10 PM
Colombo (News 1st) கோதுமை மாவை அதிகரித்த விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் N.S.M. பௌஸர் குறிப்பிட்டுள்ளார். 1977 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு, அதிக விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோதுமை மாவை அதிக விலையில் விற்பனை செய்த 50 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் முதல் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. எனினும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியின்றியே விலை அதிகரிக்கப்பட்டது. அத்தியவசியப் பொருளாக கோதுமை மா, பெயரிடப்பட்டதன் பின்னர் தமது அனுமதியின்றி அதன் விலையை அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், தொடர்ந்தும் கோதுமை மா ஒரு கிலோ கிராம் 87 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. தமது அனுதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை நேற்று முன்தினம் (06) நள்ளிரவு முதல் 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரித்ததால், பாணின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானித்ததாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.