Jaya Container Terminals Ltd நட்டமடையும் அபாயம்

துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான Jaya Container Terminals Ltd நிறுவனம் நட்டமடையும் அபாயம்

by Staff Writer 07-09-2019 | 10:43 PM
Colombo (News 1st) துறைமுக அதிகார சபையுடன் இணைந்த, அரசாங்கத்திற்கு சொந்தமானJaya Container Terminals Ltd நிறுவனம் வீழ்ச்சியை எதிர்நோக்கும் அபாயமுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நிறுவனத்தின் நிலையான வைப்புகளில் இருந்து 400 மில்லியன் ரூபாவை துரிதமாக நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர். கப்பல் எண்ணெயை களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோக சேவைகளுக்காக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையுடன் இணைந்த வகையில் Jaya Container Terminals Ltd நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபைக்கு சொந்தமான அரச நிறுவனமாகும். தனது சேவைகளின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் 60 வீதத்தை துறைமுகங்கள் அதிகார சபைக்கு வழங்கிய பின்னர், மிகுதி 40 வீதத்தை ஊழியர்களின் அர்ப்பணிப்பு என்ற அடிப்படையில், நிலையான வைப்பாக 550 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. அரசியல் தலையீட்டினால் இந்த பணத்தை துறைமுகங்கள் அதிகார சபையினூடாக திறைசேரிக்கு வழங்க முயற்சிக்கப்படுவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த பணத்தை அரச திறைசேரிக்கு வழங்குவது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காகJaya Container Terminals Ltd நிறுவனத்தின் நிர்வாகக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது. இது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. வைப்பிலுள்ள பணத்தை அரச திறைசேரிக்கு வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லையென அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள நிதியை பாரியளவில் இந்த அரசாங்கம் பல்வேறு முதலீடுகளுக்காக பயன்படுத்தியதன் ஊடாக இலாபம் ஏற்படவில்லை, அப்பாவி ஊழியர்களின் நிதிக்கே நட்டம் ஏற்பட்டது. அத்துடன், முறிகள் சம்பவத்தின் போது மக்களின் நிதியை மத்திய வங்கி வீண்விரயமாக்கியது. அதனைப்போன்றே மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட நிர்வாக சபையினர் முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.