வேட்பாளர் தொடர்பில் தெரியப்படுத்துமாறு அறிவிப்பு

வேட்பாளர்களை களமிறக்குவதாயின் தமக்கு தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

by Staff Writer 06-09-2019 | 3:55 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர்களை களமிறக்குவதாயின் அது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். அதன்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று அறிவித்துள்ளார். அதனடிப்படையில், ஜனாதிபதி தேர்தலுக்கான அடுத்த கட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதாக வீரக்குமார திசாநாயக்க குறிப்பிட்டார். மேலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் தினங்களில் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.