ஐ.தே.க வேட்பாளரை மக்களே தெரிவு செய்து விட்டனர்: மங்கள சமரவீர

by Bella Dalima 06-09-2019 | 8:15 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை மக்களே தெரிவு செய்து விட்டதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். அனைத்து பகுதிகளிலும் அமைச்சர் சஜித் பிரேமதாசவையே மக்கள் கோருவதாகவும் இந்த கோரிக்கையை மாத்தறை மற்றும் பதுளையிலும் மஹிந்த ராஜபக்ஸ பிரதிநிதித்துவப்படுத்தும் குருநாகல் மாவட்டத்திலும் மக்கள் முன்வைத்ததாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். சஜித் பிரேமதாச முன்னெடுத்த சேவைகளின் புகைப்படங்களே வட மாகாணத்திலும் காணப்படுவதை ரயிலில் பயணிக்கும் போது அவதானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள 'Enterprise Sri Lanka 2019' கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர் இன்று அங்கு சென்றிருந்தார்.