அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பம்

by Bella Dalima 06-09-2019 | 3:45 PM
Colombo (News 1st) அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில், முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்துவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி இன்று கையொப்பமிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதி செயலகத்தில் குறித்த ஆவணம் ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த ஆவணத்தை சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரால் 21,000 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆவணம் சிங்கப்பூரிலுள்ள துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.