தாய் நாட்டை நிர்வகித்தவரின் மனைவி தனது மகன் நாட்டை ஆள வேண்டும் என விரும்புகின்றார்: க.துரைரட்ணசிங்கம்

by Staff Writer 05-09-2019 | 8:50 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரி திருகோணமலை கஜபா விகாரையில் இன்று விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. திருகோணமலை கஜபா விகாரையின் விஹாராதிபதி சுமனரத்ன தேரர் தலைமையில் இந்த வழிபாடுகள் இடம்பெற்றன. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாசவும் வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் பங்கேற்றிருந்தார். அவர் இந்நிகழ்வில் தெரிவித்ததாவது,
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச போன்று தனது சேவையை பேதமின்றி முன்னெடுக்கக்கூடிய தலைவர் சஜித் பிரேமதாச. தாய் நாட்டை நிர்வகித்தவரின் மனைவி தனது மகன் நாட்டை ஆள வேண்டும் என விரும்புகின்றார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. நாட்டு மக்கள் அபிமானமுடைய, பற்றுள்ள தலைவரே இப்போது ஜனாதிபதியாக வர வேண்டும் என விரும்புகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் எமது கட்சியும் எதிர்காலத்தில் தீர்மானிக்கும்.