குருநாகலில் சஜித்திற்கு அமோக வரவேற்பு; பாரிய அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதி

by Bella Dalima 05-09-2019 | 8:12 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச பங்கேற்ற விசேட கூட்டம் குருநாகலில் இன்று மாலை நடைபெற்றது. குருநாகல் சத்தியாவதி மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு மக்களின் அமோக வரவேற்பு கிடைத்தது. சர்வ மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக்கொண்ட பின்னர் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, தனது தந்தை ரணசிங்க பிரேமதாச குருநாகலில் இருந்தே 'கம் உதாவ' திட்டத்தை ஆரம்பித்ததாகவும் குருநாகல் மாவட்டத்தின் நன்றியுள்ள மக்கள் அந்த இன்பமான கடந்த காலத்தை ஒரு போதும் மறக்க மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும், இந்த நாட்டை பலப்படுத்தும் பாரிய அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்துவதாக தனது உரையின் போது அவர் வாக்குறுதியளித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரினதும் ஆசியைப் பெற்றுக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டிற்கும் உயிர் தியாகம் செய்த ரணசிங்க பிரேமதாசவின் மகனுக்கு நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கும் என்று தான் நம்புவதாக சஜித் பிரேதமாச மேலும் குறிப்பிட்டார்.