குண்டுதாரி உடலை மட்டக்களப்பில் புதைக்க முடியாது

குண்டுதாரியின் உடற்பாகங்களை மட்டக்களப்பில் புதைக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றம்

by Staff Writer 05-09-2019 | 8:57 PM
Colombo (News 1st) தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் புதைக்க முடியாது என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்றைய பொது அமர்வு நடைபெற்றது. மட்டக்களப்பு - கள்ளியங்காடு மயானத்தில் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமை தொடர்பிலான விவாதம் இதன்போது நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியசாலைக்குள் வைக்கப்பட்டுள்ள உடற்பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைக்க முடியாது எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்கொலைதாரியின் உடற்பாகத்தை கள்ளியங்காடு மயானத்தில் புதைக்க காரணமான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாநகர சபை இன்று மற்றுமொரு பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. இந்தப் பிரேரணைகளுக்கு ஆதரவாக 15 பேரும் எதிராக 8 பேரும் வாக்களித்ததுடன், 14 பேர் நடுநிலை வகித்தனர். இன்றைய அமர்வில் ஒரு உறுப்பினர் கலந்துகொள்ளவில்லை.