தேர்தல்கள் ஆணைக்குழு 9ஆம் திகதி கூடுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு 9ஆம் திகதி கூடுகிறது

by Staff Writer 05-09-2019 | 9:55 AM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு கோரப்படும் திகதியும் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு, மாவட்ட ரீதியில் முறைப்பாட்டுக் குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, தற்போது வெற்றிடமாகவுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தி, குருணாகல் மாவட்ட தெரிவுக்குழு அதிகாரிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. சாலிந்த திசாநாயக்க காலமானதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.