துமிந்த திசாநாயக்கவிற்கு ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 04-09-2019 | 10:01 AM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய துமிந்த திசாநாயக்கவை, கடந்த வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (04) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சுக்கான கட்டடத்தை அதிக விலையில் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கட்டடத்தைக் குத்தகைக்கு பெற்றுக்கொள்வதற்கான அனுமதிக் கடிதத்தை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 20 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி துமிந்த திசாநாயக்க வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த அனுமதிக் கடிதம் பெறப்பட்டிருந்தால் அது தொடர்பிலான எழுத்துமூல ஆவணத்தை இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ விஜேரத்ன மற்றும் அதிகாரிகள் சிலரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் கடந்த 27 ஆம் திகதி பிரதமரின் செயலாளரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சாட்சியம் வழங்கியுள்ளனர். நிதியமைச்சின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாயகம் K.D.R. ஒல்கா கடந்த வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். எரிபொருள் களஞ்சியசாலை தொடர்பிலான சாட்சி விசாரணைக்காகவே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.