by Staff Writer 04-09-2019 | 7:56 AM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதேச சபைத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும் விரையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
காலி மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண இதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக, உடனடியாக தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் கடந்த 30ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்தது.
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது ஐனநாயக ஐக்கிய தேசிய முன்னணி எல்பிட்டிய பிரதேசசபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து அந்த கட்சியின் செயலாளர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனு மீதான தீர்ப்பை அறிவித்தபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.