by Staff Writer 03-09-2019 | 7:46 AM
Colombo (News 1st) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று (02) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர் நேற்று ஆஜராகவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தனது தாய் சுகயீனமுற்றிருப்பதாகத் தெரிவித்து அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கல்வி அமைச்சருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது
கல்வி அமைச்சினால் I.M.K.B. இளங்கசிங்கவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, புற்றுநோய்க்கான மருந்துகளை பெற்றுக்கொள்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்கள் சிலர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளனர்.