கிரிக்கெட் நிர்வாகக் குழுவுக்கு கோப் குழு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகக் குழுவுக்கு கோப் குழு அழைப்பு

by Staff Writer 03-09-2019 | 8:36 AM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு இன்று (03) கோப் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளது. 9 அரச நிறுவனங்களை விசாரணைக்கு அழைக்கும் திட்டத்தின் கீழ் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளை இன்று பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கைகள் தொடர்பில் இதன்போது கேள்வி​ எழுப்பப்படவுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா நிறைவேற்றுக் குழுவின் அங்கத்தவர்கள் சிலரும் இன்று அழைக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் நிறுவனத்தின் உப செயலாளர் கிரிஷாந்த கபுவெத்த மற்றும் பொருளாளர் லசந்த விக்கிரமசிங்க ஆகியோரும் இன்று கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர். எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் உப தலைவர் ரவீன் விக்கிரமரத்ன ஆகியோர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளமையால் அவர்களுக்கு இன்று கோப் குழுவில் முன்னிலையாகுவதற்கான வாய்ப்பு இல்லை. பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவருமான சுனில் ஹந்துன்நெத்தியின் தலைமையில் கோப் குழு கூடவுள்ளது.