by Staff Writer 31-08-2019 | 3:22 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் முதற்கட்ட வினாத்தாள்களை திருத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 12 பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, எதிர்வரும் 16 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வினாத்தாள்கள் திருத்தத்திற்காக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச மற்றும் அரசின் அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள், நாளை மறுதினம் (02) ஆரம்பிக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு ராஜகீய வித்தியாலயம், கொழும்பு நாலந்தா கல்லூரி, கொழும்பு இந்து கல்லூரி, களுத்துறை ஞானோதயா மகா வித்தியாலயம் , இரத்தினபுரி மிஹிந்து வித்தியாலயம், குருணாகலை ஷாந்த ஆனா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வூட் வித்தியாலயம், கண்டி விகாரமகாதேவி மகளிர் பாடசாலை, கண்டி சீதாதேவி மகளிர் பாடசாலை, காலி வித்யாலோக பாடசாலை, பதுளை விகாரமகாதேவி மகளிர் பாடசாலை மற்றும் பதுளை ஊவா கல்லூரி என்பன மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.