ஹேக் செய்யப்பட்ட ஜேக் டார்ஸியின் ட்விட்டர் கணக்கு

ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியின் கணக்கு; பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம்

by Bella Dalima 31-08-2019 | 5:17 PM
Colombo (News 1st) ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸியின் (Jack Dorsey) ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் நேற்று (30) முடக்கப்பட்டது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து நிற, இனவெறிக் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும், குண்டு வைப்பது தொடர்பாகவும் பதிவிடப்பட்டிருந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் தான் இந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. ஹேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பதிவுகளில் Chuckling Squad என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருந்தது. இது சமீபத்தில் பல முக்கிய நபர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டபோது பதிவிடப்பட்டிருந்த அதே ஹேஷ்டேக் ஆகும். மேலும் இந்த முடக்கங்களுக்கு காரணமான ஹேக்கர் குழுவாக இந்த ஹேஷ்டேக் கண்டறியப்பட்டுள்ளது. ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாதாரண ட்விட்டர் கணக்குகளின் நம்பகத்தன்மை தொடர்பாக பயனாளர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.