நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டால் நீதிமன்றம் செல்லத் தயார்

by Staff Writer 31-08-2019 | 5:49 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆசனத்திற்கு வர முடியாத ஒரு சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுவார்களாயின், நீதிமன்றம் சென்று அதனை முறியடிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின், உயர் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி முறையை ஒழிப்பதாயின், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அல்லது ஆட்சிக்கு வந்தவுடன் செய்திருக்க வேண்டும் எனவும் அதற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.