ஜனாதிபதி ஆணைக்குழு கல்வி அமைச்சருக்கு அறிவிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கல்வி அமைச்சருக்கு மீண்டும் அறிவிப்பு

by Staff Writer 31-08-2019 | 4:07 PM
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் விநியோகப்பிரிவு அத்தியட்சகராக சேவையாற்றும் I.M.K.P.இலங்கசிங்க, தனக்கு எதிராக கல்வி அமைச்சரால் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் எதிர்வரும் 2 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் விடயத்திற்குபொறுப்பான அமைச்சரின் புகைப்படம் அச்சிடப்பட்டமை தொடர்பில் சாட்சியம் வழங்கிய I.M.K.P.இலங்கசிங்கவை இடமாற்றம் செய்து கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தார். இது தொடர்பில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவரை மீண்டும் அமைச்சின் விநியோகப்பிரிவு அத்தியட்சகராக ஆணைக்குழு நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பின்னர், I.M.K.P.இலங்கசிங்கவிற்கு எதிராக கல்வி அமைச்சினால் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.