பருத்தித்துறை மீன்பிடித்துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் ஜனாதிபதியால் நாட்டப்பட்டது

by Staff Writer 30-08-2019 | 8:19 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நாட்டப்பட்டது. வடக்கின் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் 12,600 மில்லியன் ரூபா இந்த துறைமுகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுனர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, யாழ். குடா நாட்டிற்கான குடிநீர் வழங்கும் திட்டமும் ஜனாதிபதியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வடமராட்சி - கப்பூதுவௌி - அந்தணத்திடல் பகுதியில் இந்த குடிநீர் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளது. யாழ் - இந்து ஆரம்ப பாடசாலையில் 23 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை, யாழ். மாவட்டத்திற்கான ஸ்மார்ட் ஶ்ரீலங்கா அலுவலகமும் ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன்போது, 7 வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை ஒரு வாரத்திற்குள் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். மேலும், நாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ், யாழ் - கைதடி வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.