பம்பலப்பிட்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

பம்பலப்பிட்டியில் 10 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம்

by Staff Writer 30-08-2019 | 3:28 PM
Colombo (News 1st) பம்பலப்பிட்டி பகுதியில் நாளை (31) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைய, பம்பலப்பிட்டி பகுதியில் இன்று மாலை 4 மணி முதல்​ 6 மணி வரை சிறப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த பாதுகாப்பு மாநாட்டில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, காலி - கொழும்பு பிரதான வீதியின் சீனிகம பகுதியில் நாளை முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வரலாற்று சிறப்பு மிக்க ஶ்ரீ மகா தெவோல் தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரா காரணமாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாளை (31) மற்றும் நாளை மறுதினங்களில் (01) பிற்பகல் 1.10 முதல் மாலை 6.00 மணி வரை காலி - கொழும்பு பிரதான வீதியில் வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி இரவு 9.30 முதல் 3 ஆம் திகதி அதிகாலை 2.30 வரையிலான காலப்பகுதியில் குறித்த வீதியில் வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 04 ஆம் திகதி அதிகாலை 03 மணி வரை காலி - கொழும்பு பிரதான வீதியில் வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. சீனிகம பகுதியினூடாக செல்லும் வாகன சாரதிகளை குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏனைய செய்திகள்