நல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார்

by Staff Writer 29-08-2019 | 7:44 PM
Colombo (News 1st) கடல் கடந்து சென்றவர்களை மீண்டும் தாயகத்தில் ஒன்றுசேர வைக்கும் அற்புத திருவிழாவான நல்லூர் கந்தனின் வருடாந்த இரதோற்சவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஈழத்து வரலாற்றில் சைவ சமயத்தவர்களின் குறைதீர்க்கும் கடவுளான நல்லைக் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழாவிற்கு தனி சிறப்புண்டு. யாழ்ப்பாணத்தையே விழாக்கோலமாய் மாற்றும் ஒன்றாகவே நல்லூர் தேர்த்திருவிழா திகழ்கின்றது. அந்த வகையில், இவ்வருடமும் நல்லைக் கந்தன் தேரேறி வீதி உலா வருவதைக் காண ஆயிரமாயிரம் பக்தர்கள் பக்தி செருக்குடன் நல்லூரில் திரண்டிருந்தனர். பக்தர்களின் பக்தி கோஷத்திற்கு மத்தியில் நல்லைக் கந்தனின் இரதோற்சவம் இனிதே அரங்கேறியது. முருகப்பெருமானுக்கு அதிகாலையிலேயே பூஜைகள், அபிஷேகங்கள், வசந்தமண்டப பூஜை என்பன கிரமமாக நடைபெற்றன. ஆலயத்தின் காண்டாமணி ஓங்கி ஒலிக்க முருகப் பெருமான் சித்திரத்தேர் ஏறி உலா வந்தார். சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய திருத்தேரில் முருகப்பெருமான், கஜவல்லி, மகாவள்ளி சமேதரராக எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் புரிகின்ற காட்சி கொள்ளையழகு. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முருகப்பெருமான் கம்பீரமான தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்தார். பாற்காவடிகள், பறவைக்காவடிகள், கற்பூரசட்டிகள், அங்கபிரதஸ்டனம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து அடியார்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.