by Staff Writer 29-08-2019 | 6:20 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இரண்டு வாரங்களுக்குள் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் மேலதிக வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள முடியாமையினால் தொடர்ந்தும் விசாரணை தாமதமடைவதாக சுட்டக்காட்டி, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரசதரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி மன்றில் கூறிய விடயங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான ரவி கருணாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பலமுறை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அவர் திணைக்களத்தில் ஆஜராகவில்லை எனவும் அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதனை கருத்திற்கொண்டு, இரண்டு வாரங்களுக்குள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கு அடுத்த மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.