பிச்சை எடுத்தவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு

ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு

by Bella Dalima 28-08-2019 | 3:48 PM
ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ரனு மண்டல் எனும் பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துப்போன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவைப் பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பொன்றை வழங்கியது. அந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பினை வழங்கியுள்ளார். ரனு மண்டலின் பாடும் திறனை உலகறியச் செய்த ஹிமேஷ் ரேஷ்மியாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ரனு மண்டலுக்கு 55 இலட்சம்இந்திய ரூபா மதிப்பிலான வீடு ஒன்றை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்துள்ளதாகவும், மேலும் அவர் அடுத்ததாக நடித்துவரும் தபங் 3 படத்தில் ரனு மண்டலுக்கு பாட வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.