ஜம்மு - காஷ்மீர் விவகாரம்; அக்டோபரில் மீள்பரிசீலனை

ஜம்மு - காஷ்மீர் விவகாரம்; அக்டோபரில் மீள்பரிசீலனை

by Staff Writer 28-08-2019 | 12:27 PM
Colombo (News 1st) ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மத்திய அரசின் நடவடிக்கையின் அரசியலமைப்பு பெறுமதி எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் இன்று (28) அறிவித்துள்ளது. அத்துடன், அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு மனுக்களை இன்று உயர்நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருந்தது. குறித்த அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்வதற்கு ஐவரடங்கிய அரசியலமைப்பு சபைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமது கட்சி உறுப்பினரை சந்திக்க இடதுசாரி கட்சியின் சீதாராம் யேச்சுரிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், வௌிமாநிலங்களில் கல்வி பயிலும் மாணவரான அலீம் சாயீட் ஜம்மு - காஷ்மீரில் தமது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தம்மால் ஶ்ரீநகருக்கு பயணிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் குடும்பத்தினர் தொடர்பிலான தகவல் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து குறித்த மாணவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன், சீதாராம் யேச்சுரி என்பவர் கமியூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவரை சந்திப்பதற்காக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ​போது அவர்களுக்கு அனுமதி வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் 370 ஆம் இலக்க சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தொலைபேசி இணைப்புக்கள், இணையத்தள சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் 50 000க்கும் அதிகமான படையினர் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.