by Staff Writer 28-08-2019 | 6:35 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கல்வியங்காடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்காக, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் நால்வர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் 2 பெண்களும் 2 ஆண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பு வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக மேலதிக படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடற்பகுதியைக் கல்வியங்காடு மயானத்தில் புதைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நேற்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் தலையினை புதைப்பதற்காக இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கல்வியங்காட்டில் வசிக்கும் தமக்குத் தெரியாமல் பயங்கரவாதியின் உடற்பாகம் நேற்று முன்தினம் தமது மயானத்தில் புதைக்கப்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் கல்வியங்காடு மயானத்திலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கல்லடிப் பாலம் வரை நேற்று மாலை பேரணியாக அணிதிரண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.