கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்

பாரிய குற்றமிழைத்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்

by Staff Writer 25-08-2019 | 8:16 PM
Colombo (News 1st) சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, பாரிய குற்றங்களை இழைத்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய மரணதண்டனை பெற்ற கைதிகள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் இதில் அடங்குகின்றனர். வெலே சுதா, கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 25 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் D.M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். குறித்த கைதிகள் தடுத்துவைக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுமார் 150 கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான தேவை உள்ளதாகவும் அது குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். குறித்த கைதிகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் நிறைவில், குறித்த கைதிகள் கட்டம் கட்டமாக பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் D.M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். பூசாவுக்கு மாற்றப்படவுள்ள கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது விசேட பாதுகாப்புடன் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக​ பொலிஸ் விசேட பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்