கூட்டணி குறித்த பேச்சுக்கான புதிய உறுப்பினர்கள்

சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தைக்காக புதிய உறுப்பினர்கள் நியமனம்

by Staff Writer 25-08-2019 | 2:47 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் தாமும் உள்ளடங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். பொதுஜன பெரமுனவின் குழுத் தலைவராக கட்சியின் தேசிய அமைப்பாளரான பெசில் ராஜபக்ஸ பெயரிடப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பொதுஜன பெரமுன தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஆகியோர் அக்கட்சி சார்பிலுள்ள குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் ஆவர். இதனிடையே இரு தரப்பினருக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் கூட்டணி தொடர்பிலான பேச்சுவார்த்தையை நிறைவு செய்யவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்காக, இதற்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச ஆகியோர் பங்கேற்றனர். பொதுஜன பெரமுன சார்பில், பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் G.L. பீரிஸ், கலாநிதி ஜகத் வெல்லவத்த ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் 27 ஆம் திகதி கூடவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.