பேர வாவி ஊடாக இன்று முதல் பயணிகள் படகு சேவை

பேர வாவி ஊடாக இன்று முதல் பயணிகள் படகு சேவை ஆரம்பம்

by Staff Writer 22-08-2019 | 8:09 AM
Colombo (News 1st) பேர வாவி ஊடாக இன்று (22) முதல் பயணிகள் படகு சேவை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்தப் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து யூனியன் பிளேஸ் வொக் ஷோல் வீதி வரை பயணிகள் படகு சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்திேக் கூட்டுத்தாபனம், கடற்படையுடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. இதேவேளை, ஒரு மாத காலம் வரை, குறித்த படகு சேவை இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். படகில் 50 பேர் பயணிக்க முடியும் எனவும் தற்போது ஒரு படகு மாத்திரமே சேவையில் ஈடுபடவுள்ளதுடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 2 படகுகளும் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 3 படகுகளில் குளிரூட்டப்பட்ட படகொன்றும் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரொஷான் குணவர்தன கூறியுள்ளார். இந்தச் செயற்றிட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், வௌ்ளவத்தையிலிருந்து பத்தரமுல்ல வரையிலும் மட்டக்குளியிலிருந்து ஹங்வெல்ல வரையிலும் மட்டக்குளியிலிருந்து நீர்கொழும்பு வரையிலும் பயணிகள் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.