முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது

by Staff Writer 22-08-2019 | 8:40 PM
Colombo (News 1st) நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது. நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பு பீ. சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. மழை காரணமாக பல மணித்தியாலங்கள் தாமதமாக ஆரம்பமான இந்தப் போட்டியில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு ஒத்துழைத்து விளையாடிய குசல் மென்டிஸினால் 32 ஓட்டங்களையே பெற முடிந்தது. இலங்கை அணி 79 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டதுடன், இன்றைய முதல் நாள் முடிவுக்கு வந்தது. திமுத் கருணாரத்ன 49 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மெத்யூஸ் ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதுள்ளனர்.