நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குட்பட்டது துறைமுக நகர்

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பிரதேசமாக கொழும்பு துறைமுக நகர் பிரகடனம்

by Staff Writer 20-08-2019 | 6:51 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர், நகர அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைமுக நகரின் அடுத்தகட்ட அபிவிருத்தி திட்டங்கள் அதிகார சபையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய கண்காணிக்கப்படும் என பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான சட்டத்தின் 3 ஆம் பிரிவிற்கு அமைய இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரை கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் இணைப்பதற்கான பிரேரணை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட நிர்வாக அலகாக துறைமுக நகர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.