JMI உறுப்பினர்கள் இருவர் தடுத்துவைத்து விசாரணை

ஜமாத் இ மில்லாது இப்ராஹிம் அமைப்பின் இரு உறுப்பினர்களை தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை

by Staff Writer 20-08-2019 | 9:38 AM
Colombo (News 1st) தடை செய்யப்பட்டுள்ள ஜமாத் இ மில்லாது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரை 3 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 3 நாட்கள் விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷீமுடன் நுவரெலியாவில் பயிற்சிகளை பெற்றுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் நேற்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் காலியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த நௌபர் மௌலவியின் மகன், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொஹமட் நௌபர் அப்துல்லா எனும் குறித்த சந்தேகநபர், நுவரெலியாவலில் ஆயுதப் பயிற்சிகளை பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.