குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது பாதுகாப்பு தேவை

குப்பைகளைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

by Staff Writer 20-08-2019 | 7:02 AM
Colombo (News 1st) கொழும்பின் குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, உரிய பாதுகாப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர சபை, பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, இடைக்கிடையே ஏற்படும் தடைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநாகர சபை ஆணையாளர் பாலித நாணக்கார தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை நேற்று (19) பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பு குப்பைகளைக் கொண்டுசென்ற டிப்பர் வண்டிகள் மீது தாக்குதல் நடத்திய 4 சந்தேகநபர்களும் தலா 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேநபர்கள் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதேவேளை, குப்பைகளைக் கொண்டுசெல்லும் மார்க்கங்களிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கொழும்பின் குப்பைகளை ரயில் ஊடாக அருவக்காட்டு கழிவகற்றல் தொகுதிக்கு கொண்டுசெல்லும் திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை நடைமுறைப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துளளது. குப்பைகளைக் கொண்டுசெல்லும் ரயில்கள் மற்றும் மார்க்கங்கள் தொடர்பில் ஆராய்வதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.