ஷவேந்திர சில்வாவின் நியமனம்; அமெரிக்கா கவலை

ஷவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்கா கவலை

by Staff Writer 19-08-2019 | 8:34 PM
Colombo (News 1st) லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கவலையடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் இன்று (19) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புக்களினாலும் அவருக்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமாக காணப்படும் இந்தத் தருணத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையானது இலங்கையின் நன்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாடுகளை வலிதற்றதாக்குவதாக அமைந்துள்ளதாகவும் ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.