முகத்துவாரம் பகுதியில் ஒன்றரை மாத சிசு கொலை

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் ஒன்றரை மாத சிசு கொலை: தாய் பொலிஸாரால் தடுத்து வைப்பு

by Staff Writer 17-08-2019 | 3:36 PM
Colombo (News 1st) கொழும்பு முகத்துவாரம் பகுதியில் ஒன்றரை மாத சிசு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தாய் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நீதவான் விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர். முகத்துவாரம் - அளுத்மாவத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான தாய் ஒருவரே சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சுயநினைவிழந்துள்ளதாக தெரிவித்து நேற்று முந்தினம் (15) தனது ஒன்றரை மாத பெண் சிசுவை குறித்த தாய் தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும், சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். பிரதேப் பரிசோதனை மேற்கொண்ட போது, வாய் மற்றும் மூக்கு அடைக்கப்பட்டமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிசு உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மருந்து வில்லைகளை விழுங்கிய பெண் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியுள்ளார். இதன் பின்னரே குழந்தை சுயநினைவை இழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.