ஐ.தே.க தலைமையிலான கூட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் இணக்கப்பாடின்றி முடிவு

by Staff Writer 17-08-2019 | 7:32 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டமைப்பு தொடர்பான தீர்மானமிக்க சில கலந்துரையாடல்கள் இன்று இடம்பெற்றன. உத்தேச கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கமைய, அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கும் கட்சித் தலைவர்கள் இன்று காலை கூடினர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக தகவல் பதிவாகியுள்ளது. மேலும் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கூட்டமைப்பில் இணையவுள்ள கட்சிகளின் தலைவர்கள் சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானமொன்றை எட்ட வேண்டும் என்பது சந்திப்பில் கலந்துகொண்ட பெரும்பான்மையானோரின் கருத்தாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், மூன்று மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக்கொண்டனர்.