by Staff Writer 16-08-2019 | 3:43 PM
Colombo (News 1st) வைத்தியசாலைக் கழிவுகள் முறையற்ற வகையில் அகற்றப்படும் சம்பங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அனைத்து வைத்தியசாலைகளிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதற்கான நடைமுறைகள் காணப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
வைத்தியசாலை கழிவுகள் பல்வேறு இடங்களில் கொட்டப்படுகின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுகாதார ஒப்பந்தமொன்றிற்கு ஏற்றவாறு, மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபை, சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார நிறுவனங்கள ஒன்றிணைந்தே கழிவகற்றல் தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், வெவ்வேறு இடங்களில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை, மெடில்ல வாவி மற்றும் செவனகல பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை வைத்தியசாலையின் கழிவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.