மதுரங்குளியில் காணாமற்போயிருந்தவர் சடலமாக மீட்பு

மதுரங்குளியில் காணாமற்போயிருந்தவர் சடலமாக மீட்பு

by Staff Writer 16-08-2019 | 3:26 PM
Colombo (News 1st) புத்தளம் - மதுரங்குளி, நல்லாந்தழுவ பகுதியில் காணாமற்போயிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தென்னந்தோப்பு ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சடலம் நேற்று (15) பிற்பகல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி குறித்த நபர் காணாமற்போனதாக அவரின் உறவினர்களால் அன்றைய தினமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதோடை குளத்தில் தலைக்கவசமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமரா காட்சிகளை பரிசோதித்த பொலிஸார், வீடொன்றை சோதனையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமது பண்டிகைக்காக, வெட்டப்பட்ட மாட்டின் எச்சங்கள் புதைக்கப்பட்டதாக வீட்டிலிருந்தவர்களால் கூறப்பட்ட இடத்தை பொலிஸார் தோண்டியுள்ளனர். இதன்போதே, சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் குறித்த விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.