3 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

by Staff Writer 15-08-2019 | 7:31 AM
Colombo (News 1st) இரத்தினபுரி, நுவரெலியா, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (15) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு, கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் ஆகியன தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம், மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரி பகுதியில் களு கங்கையின் மில்லகந்த பகுதி நீர்மட்டம், தொடர்ந்தும் வௌ்ளப்பெருக்கு மட்டத்தை அண்மித்து காணப்படுதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் பாலிந்த நுவர, புளத்சிங்கள, கிரிஎல்ல, இங்கிரிய, மதுராவல, மில்லனிய மற்றும் களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆற்றை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (15) பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் எனவும் திணைக்களம குறிப்பிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கையிலிருந்து விலகியிருக்கமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்வது அவதானம் என கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பத்மசிறி திசேரா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் இன்று (15) திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.