இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று

by Staff Writer 15-08-2019 | 7:59 AM
Colombo (News 1st) இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று (15) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந், நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றிய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந், அறிவியல் வளர்ச்சியில் மகாகவி பாரதியாரின் பாடலையும் சுட்டிக்காட்டியுள்ளார். மகாகவி பாரதியாரின் கவிதையை மேற்கோள்காட்டி உரையாற்றிய குடியரசுத் தலைவர், 100 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பாடி விட்டு சென்றவாறு அறிவியலில் தேசம் முன்னேற தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார். அரசியல் மாற்றத்தற்காக மாத்திரம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரவில்லை எனவும் ஒவ்வொருவரின் வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகத்தினை உயர்த்த வேண்டும் என்பதே தியாகிகளின் குறிக்கோளாக இருந்தது எனவும் ராம் நாத் கோவிந் தெரிவித்துள்ளார். இதேவேளை, அக்டோபர் 2 ஆம் திகதி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் என்பதையும் இந்திய குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இளைஞர்களின் திறமைகளை விளையாட்டு, அறிவியல் போன்று பல்வேறு துறைகளில் இருப்பதை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.