பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

by Staff Writer 13-08-2019 | 7:27 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடான வானிலையால் மகாவலி ஆற்றின் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்றிரவு (12) திறக்கப்பட்டுள்ளன. மகாவலி ஆற்றை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்ததுடன் நேற்றிரவு 9 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பொல்கொல்ல அணைக்கட்டிற்கு கீழுள்ள பிரதேசங்களில் வசிப்போர் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் மேல், தென், சப்ரகமுவ மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வட மத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சில கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பதால், மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.