EU பிரதிநிதிகள் - சம்பந்தன் இடையில் சந்திப்பு

நாட்டிற்கு தற்போது புதிய அரசியலமைப்பே முக்கிய தேவை - இரா. சம்பந்தன்

by Staff Writer 12-08-2019 | 10:29 PM
Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிலருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இன்று (12) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடலுக்கான பிரதித் தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாக வாக்களித்ததாக இரா. சம்பந்தன் இதன்போது தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது மக்கள் ஆணையை மீறும் கபடச் செயல் என இரா. சம்பந்தன் இதன்போது தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆணையை மீறும் இந்த நடவடிக்கையில் பங்குபெறுவதா என்பதும் மேற்குறிப்பிட்ட பின்னணியில் தேர்தல் நடைமுறை நியாயபூர்வமானதா என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, அரசியலமைப்பிற்கான பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் அன்றி, புதிய அரசியலமைப்பே நாட்டிற்கு தற்போது முக்கிய தேவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.