உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேருக்கு இடமாற்றம்

உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேருக்கு இடமாற்றம்

by Staff Writer 10-08-2019 | 4:07 PM
Colombo (News 1st) பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன , சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் கல்கிரியா பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபராக W.M.M. விக்ரமசிங்க இடமாற்றப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் B.R.S.R நாகாஹமுல்ல , திருகோணமலை பிராந்தியத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக D.J. பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் T.C.A. தனபால , பொலிஸ் மா அதிபரின் விசேட பணியகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்பு பிரிவிற்கு, பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ் மா அதிபர் G.K.D. பிரியந்த , குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 17 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.