ஆசியர்கள், மாணவர்களின் தகவல்கள் இணையத்தளத்தில் 

ஆசியர்கள், மாணவர்கள் தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை

by Staff Writer 10-08-2019 | 3:55 PM
Colombo (News 1st) நாட்டில் உள்ள ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பிலான தகவல்களை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முறைமையின் கீழ் பாடசாலை கட்டமைப்பிற்குள் உள்ளடங்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் முதல் நியமனத்திலிருந்து சேவையாற்றிய இடங்கள் தொடர்பான தகவல்கள், தற்போது சேவையாற்றும் பாடசாலை, நியமனத்தின் தன்மை, பதவி உயர்வு, வகுப்பு மற்றும் தரம், நியமனம் வழங்கப்பட்ட பாடம், தற்போது கற்பிக்கும் பாடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகள், மேலதிக ஆசிரியர்களுள்ள பாடசாலைகள், பாட விதானங்களுக்கு அமைய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து பாடசாலை மாணவர்களின் தகவல்களும் இந்த கட்டமைப்பில் தற்போது உள்ளடக்கப்பட்டு வருவதுடன், நாட்டின் எந்தவொரு பாடசாலை மாணவரினதும் தகவல்களை இணையத்தளத்தினூடாக சோதனையிடுவதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிட்டவுள்ளது. இந்த தகவல் கட்டமைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இணையத்தளத்தின் ஊடாக மக்கள்மயப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.