இந்தியாவின் நடவடிக்கை இருதரப்பு விவகாரம்

காஷ்மீர் விவகாரம்: அயல் நாடுகளை பொறுமை காக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகம் கோரிக்கை

by Bella Dalima 09-08-2019 | 5:15 PM
ஜம்மு - காஷ்மீர் தொடர்பிலான இந்தியாவின் நடவடிக்கை இருதரப்பு விவகாரம் என்பதால் அயல் நாடுகளை பொறுமை காக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இருந்து தவிர்ந்திருக்குமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் தொடர்பிலான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறும் காஷ்மீர் மக்களுக்கு எதிராக உயரிய இராணுவ பலத்தை பயன்படுத்தும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்க வேண்டுமெனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார். இந்த பின்புலத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இவ்வாறு அறிவித்துள்ளார். இதேவேளை, ஜம்மு - காஷ்மீரில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்திருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பிலான நரேந்திர மோடியின் தேசிய உரையின் பின்னர் இம்ரான் கான் இதனை தெரிவித்திருந்தார். ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் 46,000 படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாநிலத்தின் பெருவாரியான பகுதிகளில் 144 தடையுத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இணையத்தளம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் என்பன முடக்கப்பட்டுள்ளன.