யுத்தத்தால் அழிவடைந்த கிராமங்களை அபிவிருத்தி செய்வதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

by Bella Dalima 08-08-2019 | 8:36 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தின் ஜோசப் வாஸ் நகரில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கிராமங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 239 மற்றும் 240 ஆவது மாதிரி கிராமங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கிராமங்கள் ஜோசப் வாஸ் நகர் மற்றும் ஜோசப் புறம் என பெயரிடப்பட்டுள்ளன. 95 வீடுகளைக் கொண்ட இந்த கிராமங்களை நிர்மாணிப்பதற்காக 860 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, நாடுகளில் யுத்தம் நிறைவு பெற்று சமாதானம் உருவாகும் போது, அழிவடைந்த பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்கு அந்நாட்டுத் தலைவர்கள் சர்வதேச உதவி மாநாட்டை நடத்துவார்கள். அவ்வாறு யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் சர்வதேச உதவி மாநாட்டை நடத்தாத ஒரெயொரு நாடு இலங்கை என சுட்டிக்காட்டினார். மேலும், தேர்தலில் சரியான தீர்வொன்றை எடுத்து, தனது கரங்களைப் பலப்படுத்தினால் 6 மாதங்களுக்குள் சர்வதேச உதவி மாநாட்டை நடத்தி, கிடைக்கக்கூடிய அதிகபட்ச உதவிகளைப் பெற்று, தாய் நாட்டை விசேடமாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் அழிவடைந்த கிராமங்களுக்கான அபிவிருத்தியைக் கொண்டு வருவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சஜித் பிரேமதாச ஏழை மக்களின் எம்.ஜி.ஆர் போன்றவர் என புகழாரம் சூட்டினார்.