ஊழல் மோசடிகளை ஒழிக்கும் ஒருவராக இருக்க வேண்டும்: ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பசில் ராஜபக்ஸ

by Bella Dalima 08-08-2019 | 8:32 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்தவுள்ள மாநாடு தொடர்பில் தௌிவுபடுத்துவற்காக கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஸ கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னர், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ கூறினார். இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. நாட்டை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்ய முடியுமான ஒருவரை கட்சி என்ற வகையில் கேட்டுள்ளதாகவும், அந்நபர் ஊழல் மோசடிகளை ஒழிக்கும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதுடன், ஜனநாயக விழுமியங்களும் இருக்க வேண்டும் என பசில் ராஜபக்ச பதிலளித்தார். மேலும், அத்தகைய பண்புகள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இருப்பதாக தனிப்பட்ட முறையில் உறுதியாகக் கூறினாலும், மஹிந்த ராஜபக்ஸவின் மனதில் அதனை விட சிறந்தவர்களும் இருக்கலாம் என தெரிவித்தார். இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
எந்தவொரு கட்சிக்கும் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று கூறுவதற்கு உரிமையுள்ளது. மைத்திரிபால சிறிசேனவே எமது வேட்பாளர் என்று நாம் கூறியுள்ளோம். அதேபோன்று, அந்தக் கட்சிக்கும் தமது வேட்பாளரைப் பெயரிடும் உரிமை உள்ளது. கூட்டிணைவது என்பது அதற்கு அடுத்த கட்டமாக செயற்படும் விடயம். 11 ஆம் திகதியாகும் போது கூட்டமைப்பு உருவாக வேண்டும், கலந்துரையாடல் நடைபெற வேண்டும் என்று இல்லை. கூட்டமைப்பை உருவாக்கும் போது சிறந்த வேட்பாளரைத் தெரிவு செய்யும் இயலுமை எமக்கு உள்ளது. அன்று நாம் கூறும் பெயர்கள் இல்லாமல் இருக்கவும் முடியும்.

ஏனைய செய்திகள்