கொலைக் குற்றச்சாட்டில் சிறுவன் கைது

வெற்றிலைக்கேணி பகுதியில் கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது

by Staff Writer 07-08-2019 | 12:47 PM
Colombo (News 1st) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் தனது பாட்டியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை விலக்குவதற்கு முற்பட்ட போதே, குறித்த வயோதிபப் பெண் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மற்றும் 15 வயதான சகோதரர்களுக்கு இடையில் நேற்றிரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது 16 வயதான சிறுவன், தனது சகோதரரைத் தாக்குவதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே சிறுவர்களின் பாட்டி தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 72 வயதான வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர், இன்று (07) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.