பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் தொடர்பில் விவாதம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் தொடர்பில் வாதப் பிரதிவாதம்

by Staff Writer 07-08-2019 | 9:01 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. ஊவா மாகாண முதலமைச்சரின் 7 ஆலோசகர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து இந்த விவாதம் ஏற்பட்டது. அமைச்சர் ஒருவர் கூடிய பட்சம் இருவரையே ஆலோசகர்களாக நியமிக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊவா மாகாண ஆளுநரால் ஊவா மாகாண முதலமைச்சருக்கு 7 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருகைக் கொடுப்பனவாக 2500 ரூபா வழங்கப்படுகிறது. மாதாந்தம் நடைபெறும் 8 பாராளுமன்ற அமர்வுகளுக்கு 44 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவிடப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 54 ஆயிரத்து 285 ரூபா மாதாந்த சம்பளம் கிடைப்பதுடன், அவரது ஊழியர்களுக்காக 10 ஆயிரம் ரூபாவும் மாவட்டங்களுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவாக 20 ஆயிரம் ரூபாவில் இருந்து 50 ஆயிரம் ரூபாவும், தொலைபேசி கட்டணத்திற்காக 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது. அத்துடன், அலுவலகத்திற்காக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படுகிறது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் ஏனைய கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக 65 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. பிரதி அமைச்சர் ஒருவருக்கு 63,500 ரூபா மாதந்த சம்பளம் கிடைக்கிறது. அமைச்சரவை அந்தஸ்துள்ள 47 அமைச்சர்களுக்காக கொடுப்பனவுகள் இன்றி மாதாந்த சம்பளத்திற்காக மாத்திரம் 30 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா செலவிடப்படுகிறது. இராஜாங்க அமைச்சர்களுக்கு கொடுப்பனவுகள் இன்றி மாதாந்தம் 13 இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது. 25 பிரதியமைச்சர்களுக்காகவும் மாதந்தம் 15,87, 500 ரூபா வழங்கப்படுகிறது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என மொத்தமாக 92 பேர் மற்றும் சபாநாயகரை விடுத்து பாராளுமன்றத்தில் சம்பளம் பெறும் 132 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்றி மொத்தமாக மாதாந்தம் 71,65, 620 ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது.